Popular Posts

Friday, 10 July 2026

குடிநீர் வசதி இல்லாத கோட்டாட்சியர் அலுவலகம்... பட்டுக்கோட்டை கோட்டத்தின் அவலம்!


தஞ்சாவூர் மாவட்டம் ஆனது நிர்வாக கட்டமைப்புகளுக்காக மூன்று வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் என மொத்தம் மூன்று வருவாய் வட்டங்கள் அமைந்துள்ளது.

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மூன்று வருவாய் வட்டங்களுக்கும் உட்பட்ட 300 க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அரசின் சேவைகளை பெறவும், நில ஆவணங்கள் திருத்தம் செய்யவும், தாமத பிறப்பு இறப்பு பதிவு மேற்கொள்ளவும் மற்றும் பிற சேவைகளை பெறவும் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் மிக முக்கிய அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி கூட இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையான ஒன்றாகும்.

கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளும் செயல் இழந்து இருப்பதால் பொதுமக்கள், பெண்கள் மற்றும் முதியோர் அனைவரும் குடிநீர் இன்றி பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

குடிநீர் வசதி குறித்து அதிகாரிகளிடம் விசாரணை செய்த பொழுது கடந்த ஓராண்டாக குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படாமல் இருப்பது தெரிய வந்தது. 

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக தற்போது பணிபுரிந்து வருபவர் திரு சங்கர் அவர்கள். சிக்கலான பிரச்சினைகளை கூட சாமர்த்தியமாக சரி செய்யக்கூடிய திறமை கொண்ட அதிகாரியான இவர், அவரின் சொந்த அலுவலகத்தில் நிலவும் பொது மக்களின் மிக முக்கிய குடிநீர் வசதி குறித்தான பிரச்சினையை ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தார் என்பது தெரியவில்லை.

பொதுமக்கள் நலன் கருதி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

Friday, 12 June 2026

தஞ்சையிலும் எதிரொலித்த தொடர் மின்வெட்டு பிரச்சினை - குடிநீர் பிரச்சினையால் சாலை மறியல்

தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு ச.ஜோசப்விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்த மின்சார பிரச்சினைகள் ஆங்காங்கே தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில், தொடர் மின் தடை மற்றும் குறைந்த மின் அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த ராமாபுரம், வயலூர் கிராம மக்கள், இன்று காலிக் குடங்களுடன் தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் அதிரடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டாரை இயக்க முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டு உபயோக மின் சாதனப்பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மின் வாரியத்தினர் மற்றும் காவல்துறை சமரச பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரித்த போது மின் பற்றாக்குறை மற்றும் கோடைக்காலங்களில் மின் கடத்தலின் போது இயல்பாக ஏற்படும் மின் இழப்பு மற்றும் அதிகப்படியான மின் பயன்பாடு காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என்றும், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக உடனுக்குடன் சரி செய்ய சிரமமாக உள்ளது எனவும், இருப்பினும் மின்வாரிய அலுவலர்கள் தொடர்ந்து மின்சார விநியோகத்தை சீரமைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

Wednesday, 10 June 2026

பேராவூரணியில் ஆதார் சேவை மையத்தில் அதிர்ச்சி: கட்டணக் கொள்ளையால் பொதுமக்கள் தவிப்பு - அதிகாரிகள் நேரடி விசாரணை!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடையாளமாக ஆதார் அட்டை திகழ்கிறது. அரசு நலத்திட்டங்கள் பெறுவது முதல் வங்கிச் சேவைகள் வரை அனைத்துக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், பேராவூரணியில் உள்ள ஆதார் சேவை மையத்தில், அதிலும் குறிப்பாக BSNL மையத்தில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைவிட பல மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.


அதாவது, புதிய ஆதார் பதிவிற்கு ₹300 ம்,

பயோமெட்ரிக் (முகம், கருவிழி, கைரேகை) புதுப்பிக்க ₹250 ம்,

டெமோ கிராஃபிக் (பெயர், பிறந்த தேதி, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல்) புதுப்பித்தலுக்கு ₹150 ம் சேவை கட்டணமாக கட்டாயமாக வசூல் செய்யப்படுகிறது.


ஆனால், ஆதார் ஆணைய அறிவுறுத்தல்கள் படி புதிய ஆதார் இலவசமாகவும், மற்ற சேவைகள் மேற்குறிப்பிட்ட படத்தில் உள்ள தொகையே வசூலிக்க வேண்டும். ஆனால், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார் வந்தது.

புகார் தொடர்பாக நமது செய்தி நிறுவனம் கள விசாரணை மேற்கொண்டது. புகார்கள் உண்மை எனத் தெரியவந்ததன் அடிப்படையில், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, இன்று (10.06.2026) பட்டுக்கோட்டை AGM திரு எட்வின் அவர்கள் தலைமையில் நேரடி விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

ஆதார் சேவை மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த அலுவலர்கள் மீது கடுமையான மற்றும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நேர்மையான முறையில் சேவைகளை வழங்குவதும், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதும் மட்டுமே இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதே பெரும்பாண்மை மக்களின் கருத்து.

குடிநீர் வசதி இல்லாத கோட்டாட்சியர் அலுவலகம்... பட்டுக்கோட்டை கோட்டத்தின் அவலம்!

தஞ்சாவூர் மாவட்டம் ஆனது நிர்வாக கட்டமைப்புகளுக்காக மூன்று வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்தின் கீழ் ப...